உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்று இந்திய விமானப்படை விமானம் தரையிறங்கியபோது திடீரென டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானப்படைக்கு சொந்தமான 45 இருக்கைகள் கொண்ட அவ்ரோ விமானத்தில் மூத்த அதிகாரிகள் உள்பட 10 பேர் டேராடூன் வந்தனர். ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ரன்வேயின் பாதியிலேயே விமானத்தின் டயர் வெடித்தது.
இதனால் விமானம் பெரும் சத்தத்துடன் தரையில் உரசியபடி சென்றது. ஆனால், ரன்வேயை விட்டு விலகாமல், சரியான இடத்தில் விமானத்தை விமானி சாமர்த்தியமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதில் பயணம் செய்த 10 பேரும் பத்திரமாக இறங்கினர்.
அதேசமயம், விமானத்தை உடனடியாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த முடியாததால் மற்ற விமானங்கள் அந்த ரன்வேயில் தரையிறங்கவோ, அங்கிருந்து புறப்பட்டு செல்லவோ முடியவில்லை. இதனால் சில விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து தொழில்நுட்ப குழுவினர் தனி ஹெலிகாப்டரில் வந்தனர். அவர்கள் டயரை மாற்றியபிறகு அந்த ரன்வேயில் விமான சேவை தொடங்கும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- See more at: http://aththatchi.blogspot.com/2016/03/blog-post_23.html#sthash.sHGPLI2f.dpuf